புதன், 7 பிப்ரவரி, 2018

குறையை நிவர்த்தி செய்யும் K.பாலசந்தர் ஒரு அலசல்

கே.பாலசந்தர் இயக்கத்தில் 1980ல் வெளிவந்த வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் ஒரு காட்சி:

கமல் சலூன் கடையில் வேலை பார்ப்பார்.  வாடிக்கையாளராக தேங்காய் சீனிவாசன் வருவார்.

என்ன ஜாதி ?

ஷேவிங் க்ரீமை தடவிக்கொண்டே பாரதியார் கவிதை சொல்வார் கமல்.

“ வெள்ளை நிறத்தொரு பூனை ”
 எங்கள் வீட்டில் வளருது கண்டீர்
பிள்ளைகள் பெற்றதப் பூனை
அவை பேருக்கொரு நிறம் ஆகும்

சாம்பல் நிறத்தொரு குட்டி,
கரும் சாந்தின் நிறம் ஓரு குட்டி
பாம்பின் நிறமொரு குட்டி
வெள்ளை பாலின் நிறம் ஓரு குட்டி

எந்த நிறமிருந்தாலும்
அவை யாவும் ஓரே தரம் அன்றோ ”

 ‘பாட்டு நல்லா இருக்கு...யாரு எழுதினது ?”

 “பாரதியார்”

 “ பாரதியார் பாட்டெல்லாம் தெரிஞ்சிருக்கே! என்ன படிச்சிருக்கே ?”

 “ எம்.ஏ சார்” .

  “ எம்.ஏவா !” என எகிறி ஓட்டம் பிடிப்பார் தேங்காய்.

மேலோட்டமாகப் பார்த்தால் நகைச்சுவையாகத் தோன்றும் அந்தக்காட்சியில் கூட எத்தனை அர்த்தம் கற்பித்தார் கே.பி.  படித்த இளைஞர்கள் அரசாங்க வேலைக்கு காத்திராமல் சுயதொழில் செய்யலாம் என்ற ரீதியில் நீங்கள் புரிந்துக் கொண்டால் கே.பியை சரியாக புரிந்து கொள்ளவில்லை எனக்கொள்க. மீண்டுமொருமுறை அந்தப் பிதாமகரின் படைப்புகளை கூர்ந்து கவனிக்கவும்.

தமிழ் சினிமாவின் பிதாமகர்   கே.பி என்று அன்போடு அழைக்கப்படும் கே. பாலசந்தர் தான் இன்றைய முன்னணி நடிகர் / நடிகைகளுக்கு  குருநாதர்.

பாலசந்தர் தஞ்சாவூர் ஜில்லாவை சார்ந்த நன்னிலம் என்னும் குக்கிராமத்தில் பிறந்தவர். இளங்கலை பட்டம் பயின்று ஆட்சியர் பணிக்கு போவார் என்று கனவு கண்ட தந்தைக்கு ஆசிரியர் பணி போதுமானது என்று கனவை முடித்து வைத்தவர். ஏனெனில் கே.பி.யின் கனவு வேறு உலகமாய் இருந்தது.

முத்துப்பேட்டையில் ஆசிரியராய் இருந்தவர். பகுதி நேரமாக நாடகங்களை எழுதி இயக்க ஆரம்பித்தார். இவரது நாடகங்கள் அன்றைய கூட்டு குடும்ப சூழலை, மத்திய வர்க்கத்தினரின் அவலத்தை தைரியமாக மேடையேற்றியது. சில மூட நம்பிக்கைகளை உடைத்து பெண்கல்வி, சமூகத்தில் பெண்களின் பங்கு, குடும்ப சூழலை அனுசரிக்கும் பெண்களின் திறமைகளை துணிச்சலாக வெளிச்சதிற்கு கொண்டு வந்தது.

எம்.ஜி.ஆரின் "தெய்வத்தாய்" படத்தின் வசனகர்த்தாவாக சினிமா துறையில் நுழைந்தவர் நறுக் வசனத்தில் பிரபலமடைகிறார். நகைச்சுவை நடிகராக இருந்த நாகேஷ், கே.பியிடம் நடிக்க வாய்ப்பு கேட்க முழுக்க முழுக்க நாகேஷிற்காக உருவான கதை தான் சர்வர் சுந்தரம். இந்த படத்தில் கதை வசனம் கே.பி எழுத கிருஷ்ணன்-பஞ்சு படத்தை இயக்கினர். 1964ல் ஏ.வி.எம். தயாரிப்பில் வெளிவந்த சர்வர் சுந்தரம் திரைப்படம்  தான் நாகேஷிற்கு பன்முக கலைஞர் என்ற அடையாளமாகவும்,  நாகேஷின் திரைப்பட வாழ்க்கையில் மைல்கல்லாவும் அமைந்தது.

1965ல் தனது நாடகத்தில் மிகவும் வெற்றிப்பெற்ற நாடகமான "நீர்க்குமிழி" யை படமாக இயக்குகிறார். பலவிதமான செண்டிமெண்டுகளை உடைத்த படமது. ஆயிரத்தில் ஒருவன், இதயக்கமலம், எங்கவீட்டுப்பிள்ளை, காக்கும் கரங்கள் போன்ற ஜாம்பாவான்கள் பட வரிசையில் அந்த ஆண்டு வெளியான குறைந்த பட்ஜெட் படம் நீர்க்குமிழி.

படத்தின் பெயரிலிருந்து, கதையின் போக்கு வரை தைரியமாக எடுத்த கே.பி, இறுதிகாட்சியில் திணறி இருப்பார். நாகேஷின் மரணத்தோடு முடிய வேண்டிய படத்தை சிறிது இழுத்து டாக்டர் கேரக்டர் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்வதாக முடித்திருப்பார். நாடகத்தை திரைப்படமாக மாற்றியதில் இந்த தடுமாற்றம் இருக்கலாம். ஆனாலும் படத்தில் வசனங்கள், நடிகர்கள் தேர்வு, அவர்களை நடிக்க வைத்த விதம் வெற்றிபடமாக மாற்றியது.

அடுத்தடுத்து வெற்றிபடங்களாக கொடுத்தவர், நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசனை வைத்து இயக்கிய படம் எதிரொலி. படம் படுதோல்வியடைந்தது.  சிவாஜி ரசிகர்கள் கே.பியின் வீட்டில் கல்லெறிந்தார்கள். சிவாஜியும்-எஸ்.எஸ்.ஆர்  நடிக்கும் கூட்டணி அப்படத்தோடு முடிந்தது. இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவனும் அப்படத்தோடு கே.பிக்கு இசையமைப்பதை நிறுத்திக் கொண்டார். எதிரொலி தோல்விக்கு பிறகு பிரபலங்களை இயக்குவதை குறைத்துக் கொண்டு புதுமுகங்களை அறிமுகப்படுத்தி படம் இயக்க ஆரம்பித்தார் கே.பி.

ஆரம்பகாலக்கட்டத்தில் கே.பி படங்களுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மாமணி வி.குமார் அவர்கள். இவர் கே.பி.யின் நாடகங்களுக்கு இசை அமைத்ததில் இருந்து அவருடனே பயணித்தவர். கிட்டத்தட்ட 9படங்களை இசையமைத்து இருக்கிறார்.    மெல்லிசை மாமணி வி.குமாரின் இசைக்குழுவில் தான் இன்றைய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை இசையமைத்துக் கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கே.பி. புதுமை விரும்பி. குசும்பு பிடித்தவர். அவருக்கு சரியான தீனி போட்டது  இசையமைப்பாளர் வி.குமார் தான். பாடல்களுக்கு நடுவே துணிகளை கிழித்து இசையாக்குவது, நாகேஷின் சேஷ்டகளுக்கு ஏற்ப ஏப்பம் விடுவதை தனித்தன்மையாக்குவது என கே.பியின் ரசனைகளுக்கு தீனிப் போட்ட  இசையமைப்பாளர்.

கமல்ஹாசன் அப்போது   கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக பல படங்களில் நடித்துக் கொண்டு இருக்க, அரங்கேற்றம் படம் மூலம் நல்லதொரு சினிமா வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தவர் கே.பி. 1973ல் வெளியான அரங்கேற்றம் படத்திலிருந்தே குடும்ப கட்டுப்பாடு பற்றிய விழிப்பு உணர்வை சொல்ல ஆரம்பித்திருந்தார். .

கே.பியிடம் இருந்த இன்னுமொரு நல்லபழக்கம் திறமைவாய்ந்த கலைஞர்களுக்கு வாய்ப்பு குறைவாக கொடுத்ததாக நினைக்கும் நடிகர் / நடிகைகளுக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு தருவார். ரஜினியையும் அப்படித்தான் கண்டெடுத்தார் பாலசந்தர்.

புன்னகை மன்னன் படத்தில் நடன மாணவனாக நடித்திருந்தவர் ரமேஷ் அரவிந்த். 1986ல் கன்னடத்தில் "சொல்லத்தான் நினைக்கிறேன்" திரைப்படத்தை இயக்கும் போது முக்கிய வேடம் கொடுத்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகே கன்னடத்தில் பிரபல கதாநாயகனாக மாறினார் ரமேஷ் அர்விந்த். அழகன் படத்தில் மதுபாலாவின் தோழியாக அறிமுகமானவர் யுவராணி. படத்தின் நீளம் காரணமாக யுவராணி நடித்த பாகங்கள் வெட்டு விழ, ஜாதிமல்லி திரைப்படத்தில் வினித் கதாநாயகனாக நடிக்க, குறும்பான கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார் யுவராணி. அழகன் படத்தில் நந்தகுமார் (விவேக் உடனான நகைச்சுவை காட்சி ஒன்றில் மைனர் குஞ்சுவிற்கு தீர்ப்பு சொல்பவர்) சிறுவேடத்தில் நடிக்க அடுத்த படத்தில் வாய்ப்பளித்தார். கே.பி.கரங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட   கலைஞர்கள் சோடை போனதாக வரலாறு இல்லை. அதனால் தான் அவர் பீஷ்மர்.

கே.பாலசந்தரின்  மெகா ஹிட்டுகளான அரங்கேற்றம், அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு, தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, மனதில் உறுதி வேண்டும், சிந்துபைரவி படங்களை வைத்தே சினிமாவை எப்படி எடுக்க வேண்டுமென நீண்ட தொடரை ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு திரைப்படத்திலும் கற்றுக் கொள்ள அவ்வளவு விசயமிருக்கிறது.

கே.பி.யின் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் வித்தியாசமானதாகவும் ஆச்சரியமானதாகவும் இருக்கும். உதாரணத்திற்கு "புன்னகை மன்னன்" டெல்லிகணேஷ், சிந்துபைரவி ஜனகராஜ், வறுமையின் நிறம் சிவப்பு ஒரு விரல் கிருஷ்ணா ராவ். ஒவ்வொரு படத்திலும் அவரது  கதாபாத்திரங்கள் வெகுஜன மக்களில் ஒருவராய், மிகைப்படுத்தப்படாத கேரக்டராக அமைப்பது கே.பியின் ஸ்பெஷல்.

திரையில் கொடிகட்டிப் பறந்த இவர், தொலைக்காட்சிகள் வீடுகளை ஆக்ரமித்துக்கொள்ள அதிலும் கால்பதித்து வெற்றிகண்டவர். 1990ல் சென்னை தொலைக்காட்சியில் இவர் இயக்கிய "இரயில் சினேகம்" தொடர் பிரசித்தம். அண்ணி, ரகுவம்சம், கையளவு மனசு இவருடைய மேற்பார்வையில் இயக்கிய பரப்பரபான தொடர்களாகும்.  

தெலுங்கில் ஹிட் அடித்த ‘மரோ சரித்ரா’வை ஹிந்தியில் ‘ ஏக் து ஜே கேலியே'வாக ரீமேக் செய்கிறார். படம் அதிரிபுதிரி ஹிட். பாடல்கள், பாலிவுட் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் ஒலிக்க, படம் மெகா வசூல். அந்தப் படத்தின் இறுதிக் காட்சி   நாயகனும், நாயகியும் மேலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாக இருக்கும். ’காதலில் ஜெயிக்க முடியாதவர்கள் உயிரைக்கூட அந்தக் காதலுக்காக விடுவார்கள்’ என்ற வாய்ஸ் ஓவரும் வரும். 
பல காதல் தற்கொலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு, இப்படி ஒரு படமும் அதற்கு காரணமாக இருந்தது என்ற வேதனை கே.பாலசந்தருக்கு இருந்தது. அதற்காகவே ஒரு கதை எழுதி, இயக்கினார். அதுதான் ‘புன்னகை மன்னன்’. ’ஏக் துஜே கேலியே’வின் இறுதிக்காட்சி போன்ற அதே அமைப்பில்தான்,  ’புன்னகை மன்னன்’ ஆரம்பிக்கும். தற்கொலை முடிவல்ல என்ற கருத்தைச் சொல்லும். ‘ஏக் துஜே கேலியே’ வெற்றி என்றாலும், அந்தக் கருத்தை மக்களிடம் சொல்லியிருக்கக்கூடாது என்ற மனச்சுமையை ’புன்னகை மன்னன்’ மூலம் இறக்கி வைத்தார் கே.பாலசந்தர். 

அந்த மனம் தான்.. அந்த நேர்மைதான் அவர்!   

-ராஜி

(சினிமா விகடனில் வந்த கட்டுரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ராக்கி - விதியின் விளையாட்டு

ஸ்டாலின் அப்போது தான் டியூசனுக்கு புதிதாக வந்து சேர்ந்தான். அவன் தம்பி எங்களுடைய க்ளாஸ் மேட். இவன் ஒரு வருடம் பள்ளி செல்லாததால் எங்களுடன்...